பிரதமரின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் கூட்டணிக் கட்சிகள்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்தத் தொகுதியான வாரணாசியில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க போவதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் (எஸ்பிஎஸ்பி), ஆப்னா தளம் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தமது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக, சுஹல்தேவ் மகாராஜாவின் அஞ்சல் தலையை அவர் வெளியிடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி.ராஜ்பாருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், அதில் அவரது பெயர் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.
மாநில பாஜகவினர் திட்டமிட்டு தனது பெயரை அழைப்பிதழில் சேர்க்கவில்லை எனக் கூறி, இந்த நிகழ்ச்சியில் தங்களது கட்சியினர் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ராஜ்பார் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஆப்னா தளம் கட்சியின் தலைவர் ஆசிஷ் படேல் கூறும்போது, "உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர்கள், சிறுபான்மையின மக்களிடம் தொடர்ந்து அராஜக போக்குடன் நடந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, இன்று அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை எங்கள் கட்சி புறக்கணிக்கிறது" எனத் தெரிவித்தார்.
newstm.in