கேரள வன்முறை: 339 பேர் கைது
சபரிமலையில் இரண்டு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததன் எதிரொலியாக, கேரளத்தில் கடந்த சில நாள்களாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவைதொடர்பாக இதுவரை 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில டிஜிபி லோக்நாத் பெஹேரா தெரிவித்துள்ளார்.
ஐம்பது வயதுக்கு குறைவான இரண்டு பெண்கள் கடந்த புதன்கிழமை சபரிமலை ஐயப்பனை தரிசித்தனர். இந்த நிகழ்வை கண்டித்து நேற்றுமுன்தினம் கேரளத்தில் மாநில அளவிலான முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களின்போது, பாஜக தொண்டர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டது.மேலும், சபரிமலை கர்மா சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உன்னிதன் என்பவர் தாக்குதலில் உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து, கன்னூர் மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ சம்ஷீரின் வீட்டின் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசினர். அதைத்தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.
"சபரிமலை விவகாரத்தின் தொடர்ச்சியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னூர் மாவட்டத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, பத்தினம்திட்டா மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என கேரள மாநில டிஜிபி லோக்நாத் பெஹேரா தெரிவித்தார்.
newstm.in
newstm.in