“ஹௌடி மோடி” நிகழ்ச்சியில் மோடியுடன் ஒரே மேடையில் தோன்றவுள்ள ட்ரம்ப்
விரைவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவழியினர் "ஹௌடி மோடி" என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் எரிபொருள் வர்த்தகத்தின் தலை நகரமென கருதப்படும் ஹூஸ்டன் நகரில் உள்ள, என்.ஆர்.ஜி அரங்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் 50,000 இந்திய வம்சாவழியினர் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். மேலும் பத்தாயிரம் பேர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் அல்லாது, அந்த நாட்டு தலைவர் அல்லாத ஏனைய நாட்டுத் தலைவர் பங்கு பெறும் பிரம்மாண்ட நிகழ்வாக ஹௌடி மோடி நிகழ்ச்சி அந்த நாட்டு சரித்திரத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவிலுள்ள இந்திய வம்சாவழியினர் மாநாட்டில் கலந்துக் கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெறவிருக்கிறார் ட்ரம்ப்.
அவரின் இந்த முடிவு, அமெரிக்காவில் 2020 –ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
"ஹௌடி மோடி" நிகழ்வில் கலந்துக்கொள்ளப்போகும் ட்ரம்ப், அதை தொடர்ந்து, இந்த மாத இறுதியில் நியூயார்க் நகரில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை தகவல் அளித்துள்ளது.
இந்நிலையில் ட்ரம்ப் அறிவித்துள்ள செய்தியில், இந்தியா பாகிஸ்தான் பிரதமர்களை நேரில் சந்திக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஹௌடி மோடி" நிகழ்வில், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்ககளா பங்கு கொள்ளப் போவது குறிப்பிடத்தக்கது.
Newstm.in
newstm.in