நியூஸிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை கமிஷனர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன் நியஸிலாந்தில் நடைபெற்ற கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர். கன ரக துப்பாக்கிகளை எந்திய ஒருவர் இரண்டு மசூதிகளுக்குள் சென்று, அங்கு வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். சம்பவத்தை அவர் வீடியோ எடுத்து நேரலையில் ஒளிபரப்ப, இந்தத் தாக்குதல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நியூஸிலாந்து போலீஸ் கமிஷனர் மைக் புஷ் செய்தியாளர்களை சந்தித்தபோது பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இரண்டு மசூதிகளிலும் முழு சோதனை நடத்தி, கணக்கிட்டு பார்த்தபோது மேலும் ஒருவரின் உடல் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 50 பேர் இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்ததாகவும், 36 பேர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முக்கிய குற்றவாளி பிரெண்டன் டார்ரண்ட் தவிர வேறு இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் கமிஷனர் தெளிவுபடுத்தியுள்ளார்.
newstm.in
newstm.in