சோமாலியா தலைநகரில் குண்டு வெடித்து 3 பேர் பலி
சோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் அரசு அலுவலகத்தில் குண்டு வெடித்ததில் அருகில் இருந்த பள்ளி இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் பலியாகினர்.
மேலும் குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குண்டு வெடிப்பில் அங்கிருந்த வீடுகளும் மசூதி ஒன்றின் கூரையும் சேதமடைந்தது. தீவிரவாத குழுவான அல் ஷபாப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
குண்டு வெடிப்பு சமயத்தில் அந்த வளாகத்திற்குள் இருந்த ரகியா மஹமத் அலி, "சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நாங்கள் எங்கள் பணியில் இருந்தோம். எங்கள் நுழைவு வாயிலில் துப்பாக்கிச் சூடு சத்தம் பல கேட்டதும் மேசைக்கு அடியில் ஒளிந்து கொண்டோம். பின்னர் நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது பலர் காயமடைந்து தரையில் விழுந்து கிடந்தனர். மேலும் பலர் பலியாகி கிடந்தனர்" என்று கூறினார்.
சோமாலியாவின் பெரும்பாலான பகுதி, போர் நடைபெறும் இடங்களாக இருந்து வருகின்றது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் சோமாலியாவில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் சுமார் 500 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in