குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் யார்? - இலங்கை அமைச்சர் பேட்டி
இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இலங்கை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ருவான் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று(ஏப்.21), தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. மேலும், பல இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவைகளை பாதுகாப்புப்படையினர் செயலிழக்க வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
குண்டுவெடிப்புக்கு பிறகு இன்று முதல் முறையாக இலங்கை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ருவான் விஜேவர்தனே இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "இன்று காலை கொழும்பில் சவாய் திரையரங்கம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினர் அதனை செயலிழக்கச் செய்தனர். தொடர்ந்து இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் சோதனை பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 359 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 39 பேர் வெளிநாட்டினர். உயிரிழந்த வெளிநாட்டவர்களில் 17 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் விடுத்த எச்சரிக்கையை இலங்கை அதிகாரிகள் சரியாக கையாளவில்லை. ஏன் இந்த கவனக்குறைவு என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து தற்போது விபரங்களை வெளியிட முடியாது. ஆனால், இரண்டு குழுக்களாக இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அதில், ஒரு குழுவின் தலைவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்தவுடன், இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) அமைப்பிலிருந்து பிரிந்த ஒரு குழு தற்போது குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பயங்கரவாதக் குழுக்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்னும் இரண்டு நாட்களில் இலங்கையில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
newstm.in
newstm.in