பிரச்னை என்றால் விஜய்யோ, சூரியாவோ வரப்போவதில்லை - இலங்கை அமைச்சர் பேச்சு
இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்னை வரும் போது படத்தில் வரும் இந்திய நடிகர்களான விஜய்யோ, அல்லது சூரியாவோ, ஆரியாவோ வரப்போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரும் மாதம் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தபால் மூலம் வாக்குப்பதிவு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், "கொழும்பு மாவட்டத்தில் தமிழர்களின் தலைநகராக கொச்சிக்கடை உள்ளது. கொச்சிக்கடையானது வீரம் செறிந்தவர்கள் வாழும் பகுதி.
வட கொழும்பிலேயே தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். எனவே கொழும்பு வடக்கில் வாழும் தமிழர்களும் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களும் இந்த தேர்தலில் தமது பலத்தை காண்பிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்.
தற்போது கொச்சிக்கடை உட்பட கொழும்பில் சன் டி.வி. விஜய் டி.வி, உட்பட இந்திய தொலைக்காட்சிகளை தமிழ் மக்கள் பெரிதும் பார்வையிட்டு வருகின்றனர்.
இவ்வாறு படங்களையும் நாடகத் தொடர்களையும் பார்க்காது வரும் 10ம் தேதி அனைவரும் வாக்களிக்கச் செல்ல வேண்டும். படத்தில் வரும் இந்திய நடிகர்களான விஜய்யோ, அல்லது சூரியாவோ, ஆரியாவோ தமிழர்களுக்கு பிரச்னை வரும்போது வரப்போவதில்லை. ஆனால் மனோ கணேசன் மட்டுமே உங்களது வீடுகளுக்கு வருவான். எனவே இதனை உணர்ந்து கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
newstm.in