தப்புமா ராஜபக்சே பதவி?- அதிரடி முடிவில் தமிழ் தேசிய கூட்டணி
இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டணி முடிவு எடுத்துள்ளது. இதனால் ராஜபக்சேவின் பதவி கேள்விக்குறியாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ராஜபக்சே தனது பெரும்பான்மைக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடாளுமன்றத்தை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யாவை சந்தித்து ரணில் விக்ரமசிங்கே இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் அதிபரிடமே உள்ளது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இதனிடையே ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார். இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி விளந்திரையன் கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் அதில் ரணிலுக்கு 103 எம்.பிக்களின் ஆதரவு உள்ளது. ராஜபக்சேவுக்கு 100 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாக என கூறப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள 16 எம்.பி.க்கள் உட்பட மீதமுள்ள 22 எம்.பிக்கள் ராஜபக்சேக்கு எதிராக வாக்களிப்பர் என்று தற்போது வெளியாகியுள்ள தகவல் இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கூட்டணி ஆட்சி நடத்திவந்த பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சிறிசேனாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அவர் மீதான கொலை சதியையும் ரணில் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா அதிரடியாக கடந்த மாதம் 26-ம் தேதி நீக்கினார்.
மேலும் புதிய பிரதமராக ராஜபக்சேவை தேர்வு செய்தார். பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் குற்றம்சாட்டி வருகின்றன. இலங்கையின் அரசியல் சூழலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
Newstm.in
newstm.in