புலிகளுக்கு உதவியதாக பொய் வழக்கு... ஸ்விட்சர்லாந்தில் தமிழர்கள் போராட்டம்!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில், 13 பேர் மீது ஸ்விட்சர்லாந்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இதைக் கண்டித்து நேற்று ஈழத்தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலக்கட்டத்தில், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் உதவிக்கரம் நீட்டினர். பல இடங்களில் நிதி திரட்டப்பட்டு உதவிப் பொருட்களாக ஈழத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்டது. கடந்த 1999 முதல் 2009ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் 13 ஈழத் தமிழர்கள் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மீதான விசாரணை, நேற்று நடைபெற்றது. விசாரணையை எதிர்த்து, ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் நீதிமன்றத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் "நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல", சுதந்திரத்துக்காகவே போராடினோம். நாங்கள் ஸ்விட்சர்லாந்தின் சட்டத்துக்கு எதிராக வேலைசெய்யவில்லை. 13 பேர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என ஆங்கிலம் மற்றும் டச்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கோஷங்களை எழுப்பினர்.
newstm.in