இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே- உச்ச நீதிமன்றம்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பதவி காலம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு வரையில் தாம் ஜனாதிபதியாக செயற்பட முடியுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்ச நீதிமன்றிடம் கருத்து கேட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழு அமைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி நடைபெற்ற ஜனதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றிப்பெற்றார். இதையடுத்து அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக பதவி ஏற்கும் போது, 6 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற சட்டம் இருந்தது. ஆனால் 19ம் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்தார் மைத்திரிபால சிறிசேனா.
இந்நிலையில், 19வது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடருமா, அல்லது அவர் பதவி ஏற்கும் போது இருந்த 6 ஆண்டு காலம் பதவியில் இருக்கலாம் என்ற நிலை தொடருமா என்பது குறித்து பல வகையான கருத்துக்கள் சட்டம், சிவில் மற்றும் அரசியல் துறைகளில் நிலவுகின்றன. இந்த குழப்பத்தை தீர்க்கும் நோக்குடன் மைத்திரிபால சிறிசேனா, தமது பதவிக்காலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.
newstm.in