வடக்கில் நிலவும் வீட்டுத்திட்டப் பிரச்னைக்குத் தீர்வு!
வடக்கில் நிலவும் வீட்டுத்திட்டப் பிரச்னைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என இலங்கையின் தேசிய வீட்டுத்திட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
"கடந்த 2016ம் ஆண்டு வீட்டுத்திட்ட, அபிவிருத்தி அதிகாரசபைக்கு முக்கியமான ஆண்டாக அமைந்தது. 2015ம் ஆண்டு முதல் இதுவரையில் 510 வீட்டுத் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் வீட்டுத்திட்ட அபிவிருத்தி அதிகாரசபை, 600 மாதிரிக் கிராமங்களின் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்குத் தேவையான நிதி, வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக" அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் இறுதி போரில் அழிவடைந்து பொது மக்களின் வீடுகளை மீண்டும் கட்டுவதற்காக அரசு நிதி வழங்கி வருகின்றது. ஆனால் இவ்வாறு அரசாங்கம் வீட்டுத்திட்டத்திற்காக வழங்கப்படும் பணம், ஒரு முழுமையான வீட்டைக்கட்டி முடிக்க போதுமானதாக இல்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.
எனவே வங்கிகளில் கடன் பெற்று தமது வீட்டை கட்டி முடிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பெருமளவிலான மக்கள் வறுமையின் காரணமாக அரசின் உதவியையே முழுமையாக நம்பி இருக்கின்றனர். அதனால் இன்னும் வடமாகாணத்தில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி குடிசைகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கில் நிலவும் வீட்டுத்திட்டப் பிரச்னைகளுக்கு வரும் ஆண்டு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என தேசிய வீட்டுத்திட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
newstm.in