’அதிபர் பதவியிலிருந்து விலகுவேன்...’ சிறிசேன தடாலடி... இலங்கையில் உச்சக்கட்ட குழப்பம்!
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா சூளுரைத்துள்ளார்.
இலங்கையில் தற்போது உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு யார் பிரதமர் என்று அரசு அதிகாரிகளுக்கே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அருவருப்பாக மாறி வருகிறது. இந்நிலையில், இலங்கைத் தலைநகர், கொழும்பில் நடைபெற்ற இலங்கை சுதந்திர கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசுகையில், ’ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட நான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை.
புதிய அரசின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு, சுதந்திரக் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நான் இருக்கும் வரை வடக்கு- கிழக்கை இணைக்கப் போவதும் இல்லை. கூட்டாச்சியை வழங்கப்போவதும் இல்லை. அதனை அடையவேண்டுமானால் நீங்கள் முதலில் என்னைக் கொல்லவேண்டும்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கே பதவி பறிப்புக்கும், நாடாளுமன்ற முடக்கத்திற்கும் சபாநாயகர் ஜெயசூர்யா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். அதேபோல, பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை எனவும், பெரும்பான்மை பலம் தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே கூறி வருகிறார். இதனால், இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்தோடு இலங்கை நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தி பெரும் அளவில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
newstm.in
newstm.in