அடுத்த தாக்குதலுக்கு திட்டமா? - இலங்கையில் தொடரும் பதற்றம்!
வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி மற்றும் 3 வேன்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, அனைத்து காவல் அதிகாரிகளும் எச்சரிக்கையுடன் இருக்கவும், அனைத்து பகுதிகளிலும் வாகனங்களை சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நேற்று முன்தினம்(ஏப்.21), இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த கொடூரத் தாக்குதலில் இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பாக 26க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இலங்கை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி மற்றும் 3 வேன்கள் ஆகியன இலங்கை தலைநகர் கொழும்புவிற்குள் நுழைந்துள்ளதாக இந்திய புலனாய்வுத்துறை, இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து காவல் அதிகாரிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அனைத்து பகுதிகளிலும், வாகனங்களை சோதனை செய்த பிறகே அனுப்பவும் இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தகவலினால், இலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
newstm.in
newstm.in