இலங்கை குண்டுவெடிப்பில் பலி 156 ஆக உயர்வு! 35 பேர் வெளிநாட்டவர்..
இலங்கையில் இன்று 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில், பலி எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, இன்று இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி என 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன.
இதில், தற்போது பலி எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களில் 35 பேர் வெளிநாட்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் நட்சத்திர விடுதிகளில் இவர்கள் தங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பு நடந்த 6 இடங்களிலுமே மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இலங்கையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in
newstm.in