இலங்கை நாடாளுமன்ற முடக்கம் நீக்கப்பட்டதாக அதிபர் அறிவிப்பு!
இலங்கை நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை நீக்குவதாக அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மேலும், நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. தொடர்ந்து, ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, அவரை பிரதமராக பதவியேற்க அழைத்து, அவரும் இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து உலக நாடுகள் பலவும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றன. இலங்கையை பொறுத்தவரை ரணில் பதவியினை பறித்துவிட்டு ராஜபக்சே பதவியேற்றதற்கு எதிராக அங்கு போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அரசியல் சட்டத்தை மீறி அதிபர் நடந்துகொள்கிறார் என சிறிசேனா மீது உலக நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. மேலும், இலங்கை தனது அரசியல் சாசன நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச நீதி ஆணையமும் (ICJ) வலியுறுத்தியுள்ளது.
ஆனால் அதிபர் சிறிசேன, ராஜபக்சேவை பதவியில் வைக்க அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் என இலங்கை செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று, மாலை 5 மணிக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை நீக்குவதாக அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.
முன்னதாக நவம்பர் 16ம் தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேன அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in