ஆப்கானில் இரட்டை குண்டுவெடிப்பு: பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகரில் அடுத்தடுத்த நடந்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மல்யுத்த பயிற்சி மையத்தினுள் நுழைந்த பயங்கரவாதி ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். பயிற்சி மையத்தில் இருந்தோர் செய்வதரியாது தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினர். இருப்பினும் குண்டுவெடிப்பில் பலரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு பத்திரிகையாளர்களும் செய்தி சேகரிக்க குவிந்தனர்.
பரபரப்பாக மீட்பு பணிகளும் ஆய்வும் நடந்து வந்த சூழலில் பயிற்சி மையத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று அதில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் பயங்கர சத்தத்துடன் சிதறியது. அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த மோசமான தாக்குதல் சம்பவத்தில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 4 பத்திரிகையாளர்கள் உள்பட 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
Newstm.in
newstm.in