அதிநவீன ஆயுத சோதனை: மார்தட்டும் வடகொரியா
சர்வதேச அளவில் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அணுஆயுதங்களை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளதாக கூறி வந்த வடகொரியா, அதிநவீன ஆயுதம் ஒன்றை உருவாக்கி சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதல், தென் கொரியாவுடன் இணக்கமான உறவை கடைபிடித்து வந்தது வடகொரியா. அதன்பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு கிம் ஒப்புக்கொள்வதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
வெளியே அணு ஆயுதங்களை கைவிடுவதாக கூறிவந்தாலும், அதற்கான நடவடிக்கைகளை சரியாக எடுக்கப்படவில்லை என சர்வதேச அளவில் வடகொரியா மீது குற்றம்சாட்டப்பட்டு வந்தது. அணுஆயுத உற்பத்தி கூடங்களை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், நீண்டகாலமாக உருவாக்கப்பட்டு வந்த அதிநவீன ஆயுதம் ஒன்றை வடகொரியா வெற்றிகரமாக தயாரித்து சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
"வடகொரியா அரசின் அதிகாரத்தையும் ஆளுமையையும் உலகுக்கு காட்டும் நோக்கத்தோடு, அதி நவீன ஆயுதம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் வடகொரிய பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த சோதனை அத்தனை எதிர்பார்ப்புகளையும் மீறி, வெற்றி பெற்றுள்ளது" என வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்தது.
newstm.in
newstm.in