ஏவுகணை தளத்தை நிரந்தரமாக மூட வட கொரியா முடிவு: தென் கொரிய அதிபர் தகவல்
தனது ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் 3 வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், மனைவி கிம் ஜங் சூக்குடன் நேற்று பியாங்யாங் நகருக்கு 3 நாள் பயணமாக சென்றார். வடகொரியா சென்ற மூன் ஜே இன்னு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பியாங்யாங் நகரில், இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறுகையில், “ ஏவுகணை என்ஜின் சோதனை தளம் மற்றும் ஏவுதளம் ஆகியவற்றை நிரந்தரமாக அழிக்க வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா உறுதியான நடவடிக்கைகளோடு வரும் பட்சத்தில் பிரதான அணுஉலை கூடத்தை அழிக்க வடகொரியா தயராக இருகிறது'' என்றார்.
1953ஆம் ஆண்டு கொரியப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமையை கையாண்டு வந்தன. இரு நாடுகளுக்கு இடையில் இணக்கமான சூழல் ஏற்படாத நிலையில், தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே நட்புறவு மலரத் தொடங்கியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோர் இரு நாட்டு எல்லையில் உள்ள பன்மூன்ஜோம் கிராமத்தில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. அதைத் தொடர்ந்து தென்கொரியா எடுத்த முயற்சியால் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்துப்பேசினர்.
அந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரிய தலைவர் கிம் ஜாங் உறுதி அளித்து, ட்ரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பின்னர் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான வடகொரியாவின் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற போதிலும், அந்த நாடு அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை என்று நம்பப்படுகிறது. இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து அமெரிக்கா வட கொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வழிவகை செய்யவும் ஆலோசிக்கப்படுகிறது .
Newstm.in
newstm.in