ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு: 25 பேர் பலி, பலர் படுகாயம்
ஈரானில் ராணுவ அணிவகுப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 53 பேர் காயமடைந்தனர்.
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆட்சியின்போது அண்டை நாடான ஈரான் மீது போர் தொடுத்தார். கடந்த 1980-களில் 8 ஆண்டுகள் இந்த போர் நீடித்தது. இந்த போரின் நினைவுநாளையொட்டி ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் நேற்று ஈரான் ராணுவம் சார்பில், குசேஸ்தான் மாகாணத்தின் தலைநகரான அவாஸ் நகரில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அணிவகுப்பை பார்வையிட ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.
அணிவகுப்பின்போது திடீரென ராணுவ வீரர்கள் போல சீருடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், கூட்டத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை, பெண்கள், ராணுவ வீரர்கள் என 20 பேர் உயிரிழந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மோசமான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தத் தாக்குதலை ஐஎஸ் அமைப்புகள் நிகழ்த்தி இருக்கலாம் என்று ஈரான் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் ஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமீபத்தில் அங்குள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Newstm.in
newstm.in