இந்தோனேசியா சுனாமியால் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்தது
இரு தினங்களுக்கு முன் இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 128 பேரை காணவில்லை.
இந்தோனேசியாவில் உள்ள சந்தா ஜலசந்தி அருகே உள்ள அனக் க்ரக்கட்டு என்ற எரிமலை இருதினங்களுக்கு முன் வெடித்தது. இதைத்தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சுனாமி பேரலைகள் எழுந்தன. இவை ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை கடுமையாக தாக்கின. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை தீயணைப்பு படையினர் உள்பட பல்வேறு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலியானோர் எண்ணிக்கை இதுவரை 373 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 128 பேரை காணவில்லை என்றும் 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான தகவலின் படி 11,687 பேர் இந்த சுனாமியால் வீடுகள், உடைமைகளை இழந்துள்ளதாக தெரிகிறது. 611 வீடுகள் 69 ஓட்டல்கள் 60 கடைகளை 420 படகுகள் உட்பட சேதமடைந்துள்ளன. 3 அடி உயர பேரலைகள் தாக்கியதாக தெரிகிறது.
அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ பாதிப்படைந்த பகுதிகளை நேரில் சென்று, மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
சுனாமி குறித்த எச்சரிக்கைகள் கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டால் மட்டுமே வேலை செய்யும் என்றும் எரிமலை வெடிப்பினால் சுனாமி ஏற்படுவதை கண்காணிக்க முடியாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
newstm.in
newstm.in