மலேசியாவில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பொதுவெளியில் பிரம்படி
காரில் பாலியல் உறவில் ஈடுபட முயற்சித்த 2 மலேசிய பெண்களுக்கு பொதுவெளியில் வைத்து பிரம்படி தண்டனை அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மலேசியாவில் இஸ்லாமிய மத ரீதியான கட்டுபாடுகள் கடைபிடிக்கப்படுகிறது. ஓரினச்சேர்க்கை மலேசியாவில் தண்டனைக்குரிய குற்றம். இந்த குற்றத்துக்கு பிரம்படி அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க சட்டம் உள்ளது.
இந்த நிலையில், அங்குள்ள திரங்கானு மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 2 பெண் தோழிகள் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது, பொது வெளியில் காரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட இவர்கள் முயற்சித்தனர்.
அதனைக் கண்ட காவல்துறையினர் அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு ஷரியா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு 800 டாலர் அபராதம் மற்றும் 6 பிரம்படிகளை தண்டனையாக வழங்கி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்த தண்டனை இந்த இரு பெண்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்றப்பட்டது. மக்கள் கூடியிருந்த இடத்தில் ஊடகங்கள் முன்னிலையில் இந்த பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு நபர்கள் மன ஒப்புதலுடன் உறவு கொள்ள முயற்சித்த இருவரை தண்டிக்க எந்த சட்டத்துக்கும் உரிமை இல்லை என மனித உரிமை ஆர்வலர்கள் இந்தச் சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.
Newstm.in
newstm.in