வெடிகுண்டுத் தாக்குதல்: வங்கதேச முன்னாள் பிரதமர் மகனுக்கு ஆயுள், 19 பேருக்கு தூக்கு தண்டனை
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீசிய வழக்கில் 19 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, 2004ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, தலைநகர் டாக்காவில் தனது கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தினார்.
அப்போது அந்த பேரணியில் வந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷேக் ஹசீனா பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மோசமான தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 500 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு வங்கதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அதன் இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது. அதன்படி, 19 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீத ஜியாவின் மகன் தாரிக் ரகுமானும் ஒருவர் ஆவார். இவர் வழக்கு விசாரணையின்போது இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார். அதேபோல், இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் லுட்ஃபோஸ்மன் பாபரும் ஒருவர் ஆவார்.
Newstm.in
newstm.in