மலேசிய அட்டார்னி ஜெனரலாக இந்தியர் நியமனம்: மன்னர் ஒப்புதல்
மலேசியாவில் முதல்முறையாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட டாமி தாமஸ், அட்டார்னி ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் முதல்முறையாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட டாமி தாமஸ் அட்டார்னி ஜெனரல் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். சில வாரங்களுக்கு முன் புதிய பிரதமர் மகாதீர் முகமது, டாமி தாமசை அட்டார்னி ஜெனரலாக நியமிக்க பரிந்துரை செய்தார் என்ற தகவல்கள் வெளியானது. அங்கு மூன்றில் இரு பங்கு மக்கள் தொகையை கொண்ட இஸ்லாமிய மலாய் சமூகத்தினர், முஸ்லிம் ஒருவரைத்தான் அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்திய வம்சாவழி கிறிஸ்தவர் ஒருவர் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
ஆனால், டாமி தாமசை அட்டார்னி ஜெனரலாக நியமிக்க மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது ஒப்புதல் வழங்கினார். இது தொடர்பாக மலேசிய அரண்மனை விடுத்து உள்ள அறிக்கையில், "தாமஸ் நியமனம், மத, இன மோதல்களை உருவாக்காது, மலேசிய மக்கள் இனம், மதம் கடந்து நடந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
டாமி தாமஸ், மலேசியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞர் ஆவார். 40 ஆண்டுகளுக்கு மேல் சட்டத்துறையில் அனுபவம் பெற்றவர். இவர் பொறுப்பு ஏற்றதும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்புடைய ஊழல் வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துவார் என்றும் கூறப்படுகிறது. மலேசியா, தனி நாடாக உருவாகி 55 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் அட்டார்னி ஜெனரலாக பதவி ஏற்க இருப்பது இதுவே முதல் முறை.
newstm.in