நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை!
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சரிகட்ட ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் ஃபோன், சீஸ் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய அடுத்த ஒரு ஆண்டுக்கு தடை விதிக்க பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான் இந்தச் சூழல்களை கருத்தில் கொண்டு அரசுத் தரப்பில் ஆடம்பர செலவுகளை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து பொருளாதார ஆலோசகர்கள் கூட்டம் இம்ரான் கான் தலைமையில் நடந்தது.
புதிய நிதி அமைச்சர் ஆசாத் உமர் மற்றும் 15 நிதி ஆலோசகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் அதிக அளவில் அமெரிக்க டாலர் தேவைப்படுவது குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.
இதனால் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார சிக்கல் உருவாகுவதை சரிகட்ட சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து நிதி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிதியை கடனாக பெரும் யோசனையில் முரண்பட்ட அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்.
'பாகிஸ்தான் யாரிடமும் கை எந்தக் கூடாது' எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனை அடுத்து சர்வதேச நிதி ஆணையத்தின் உதவியை நாடாமல் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட முயற்சியாக பெருமளவு இறக்குமதியாகும் பொருட்களான ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் ஃபோன்கள், வெண்ணை, சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டி மற்றும் பழ வகைகளை ஓர் ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதன் மூலம் ரூ.33 ஆயிரம் கோடி பற்றாக்குறையை சரிகட்ட முடியும் என யூகிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் பாகிஸ்தானின் பற்றாக்குறை ரூ.66 ஆயிரம் கோடியாக உள்ளது.
Newstm.in
newstm.in