"மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்": ஆதாரம் காட்டும் ரஷ்யா
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 2014ம் ஆண்டு போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு உக்ரைன் அரசு தான் காரணம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், உக்ரைன் வான்வழியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். இதற்க்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் படை தான் காரணம் என முதலில் கூறப்பட்டது. ஆம்ஸ்ட்ரடாமில் இருந்து வந்த அந்த விமானத்தில் பயணித்த பெரும்பாலானோர் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். இதனால், நெதர்லாந்து அரசு தனி குழு அமைத்து விசாரணை நடத்தி, விமானத்தை சுட்டு வீழ்த்தியது சோவியத் யூனியன் காலத்தை சேர்ந்த ஏவுகணை தான் என தெரிவித்தது.
இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் அரசு தான் இந்த ஏவுகணை தாக்குதலுக்கு காரணம் என குற்றம் சாட்டியது. இதுகுறித்து ஆதாரத்தையும் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, நெதர்லாந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள பியுகே ரக ஏவுகணைகள், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டாலும், அவற்றை சோவியத் காலத்திலேயே உக்ரைனுக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். அதில் உள்ள சீரியல் நம்பர்களை குறிப்பிட்டு, உக்ரைனுக்கு அனுப்பிய ஏவுகணைகள் பட்டியலையும் வெளியிட்டனர்.
newstm.in
newstm.in