பலாக்கொட்டை சுண்டல்
எப்பொழுதும் இனிப்பு சுவையையே குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று புலம்பும் பெற்றோர்களா நீங்கள்? அப்படியானால், அவர்களின் அந்த விருப்பத்திற்கான அடிப்படைக் காரணம் உங்கள் சமையல் முறை தான். இனிப்போடு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என்று அறுசுவையையும் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு பழக்கப்படுத்துவது மட்டும் இல்லாமல் பெரியவர்களான நமக்குமே இந்த அறுசுவைகளின் கலவைகளுமே தேவைப்படும்.
ஆரோக்கியமான உடம்பிற்கு துவர்ப்பும், கசப்பும் தகுந்த இடைவெளியில் தேவைப்படுகிறது என்கிறது சித்த மருத்துவம். இது பலாப்பழங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும் சீசன். பொதுவாக, முழு பலாப்பழத்தையும் வாங்கி சாப்பிடுகிற பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு கிடையாது. அப்படியே முழு பழத்தையும் வாங்கினாலும், தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காலகட்டத்தில், சாப்பிடவும் யார் வீட்டிலும் ஆட்கள் இல்லை. அதனால், பலாப்பழங்களை வாங்கியதும் அதன் கொட்டைகளைத் தூக்கியெறிந்து விடுகிறோம். ஆனால், பலாக்கொட்டைகளில் தான் பழங்களை விட அதிக சத்துக்கள் இருக்கின்றன. அதன் துவர்ப்பு தன்மை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். பலாக்கொட்டை சுண்டல் செய்து கொடுத்தால், குழந்தைகள் ஆர்வமாக சாப்பிடுவார்கள்.
தேவையானவை
பலாக்கொட்டைகள் -50
மிளகாய் வற்றல் -6
தேங்காய் துருவல் -4டீஸ்பூன்
இஞ்சி -ஒரு துண்டு
கடலைப்பருப்பு -2டீஸ்பூன்
மல்லிவிதை -2டீஸ்பூன்
எண்ணெய் -தாளிக்க
பெருங்காயத்தூள் -ஒரு சிட்டிகை
உப்பு -சுவைக்கேற்ப
செய்முறை
பலாக்கொட்டைகளை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வறுக்கும் போது நன்றாக வாசனை வரும். பலா கொட்டைகளின் தோலும் பிரிந்து வரும். அதை உரித்து நான்கு துண்டுகளாக்கி கொள்ளவும். எல்லா கொட்டைகளையும் துண்டுகளாக்கி, தோல் சீவிய இஞ்சி சேர்த்து குழைந்து விடாமல் வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை இறுத்து வைக்கவும். கடாயில் லேசாக எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, மல்லிவிதை ,மிளகாய் வற்றல் ஆகியவற்றைத் தனித்தனியாக சிவக்க வறுத்து , கரகரப்பாகப் பொடித்து கொள்ளவும்.
பிறகு, எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும். இதனுடன் பலாக் கொட்டைகளைச் சேர்த்து தேங்காய்த்துருவல், வறுத்துப் பொடித்த பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். புதுவிதமான பலாக்கொட்டை சுண்டல் தயார்.
Newstm.in
newstm.in