திருமுருக நாயனார்
முருக நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். திருத்தொண்டத்தொகை முருகனுக்கும் அடியேன் என்று இவரைப் பற்றி குறிப்பிடுகிறது. தெய்வமணம் கமழும் திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில் அந்தணர் குலத்தில் தோன்றினார் முருகனார் என்னும் சிவத்தொண்டர்.
சிறுவயது முதலேயே சிவனார் மீதும், சிவனடியார் மீதும் பற்று கொண்டு வாழ்ந்து வந்தார் முருகனார். வாழ்வின் பேரின்பம் என்பது சிவபெருமான் மீது பற்றுக்கொள்வதால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அதனால் இடைவிடாது எம்பெருமானை நினைப்பதிலும், அவரது அடியார்களை போற்றும் பேறை மகிழ்வுடன் செய்து வந்தார்.
தேவார திருப்பதிகம், ஐந்தெழுத்து நாமம் என இடைவிடாது உச்சரித்து வந்த முருகனாரின் பணி, இறைவனுக்கு நறுமண மிக்க மலர்களைப் பறித்து மலர் மாலையைத் தொடுத்து அணிவதே. இதற்காகவே அதிகாலை வேளையில் பொழுது புலர் வதற்கு முன்பே எழுந்து, தூயநீரில் நீராடி, மேனி முழுவதும் திருநீறு பூசிக்கொள்வார். அங்கிருந்து மலர்கள் இருக்கும் தோட்டத்துக்கு கோட்டுப்பூக்கள், நீர்ப்பூக்கள், கொடிப்பூக்கள் போன்ற அனைத்தையும் தனித்தனியாக பிரித்து வகைப்படுத்தி, வெவ்வேறு கூடைகளில் போட்டுக் கொள்வார்.
இப்படி பறிக்கப்பட்ட தூய்மையான மலர்களைக் கொண்டு எம்பெருமானுக்கு மாலைகளையும், விதவிதமாக தொடுத்து மகிழ்வார். கோவை மாலை, கொண்டை மாலை, பக்தி மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று தொடுத்து, எம்பெருமானுக்கு சாத்தி மகிழ்ந்திருப்பார். வழிபாட்டுக்கேற்ப எம்பெருமானுக்கு மாலை தொடுத்து மகிழ்வார்.
சிவனடியார்களை மகிழ்வித்தால் எம்பெருமானே மகிழ்வார் என்று எண்ணிய முருகநாயனார் அடியார்களுக்காக சிறந்த மடம் ஒன்றை கட்டினார். இவரது திருமடத்துக்கு திருஞானசம்பந்தர், அப்பர்சுவாமிகள்,சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற நாயன்மார்கள் வந்தருளியதோடு இவரது நண்பர்களாகவும் மாறினார்கள்.
திருஞான சம்பந்தரின் அழைப்பை ஏற்று, திருநெல்லூரில் நடந்த திருஞான சம்பந்தரின் பெருமணத்தில் கலந்துகொள்ள சென்றார் முருகநாயனார். எம்பெருமானின் பேரொளியில் திருஞான சம்பந்தர் நுழைந்த போது சுற்றியிருந்த உறவினர், சுற்றம் சூழ இவரும் உள் நுழைந்தார். எம்பெருமானின் திருவடியை அடையும் பேறை பெற்றார்.
வைகாசி மாதம், மூலம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.
newstm.in
newstm.in