Logo

வற்றாத செல்வத்தைக் கொடுக்கும் ஆடி வெள்ளி வழிபாடு…

ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து இருக்கும் பெண்கள், ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்தால், தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். திருமணம் கைகூடாத பெண்களும், மாங்கல்ய பலம் வேண்டியும், குடும்பத்தில் நிம்மதி பெருகவும், செல்வம் கொழிக்கவும் ஆடி வெள்ளி வழிபாடு பெண்களுக்கு முக்கியமான நாள்.
 | 

வற்றாத செல்வத்தைக் கொடுக்கும் ஆடி வெள்ளி வழிபாடு…

வெள்ளிக்கிழமை என்றாலே மங்களகரமான நாள். அம்மனுக்கு உகந்த நாள். அதில் அம்மனுக்கு உகந்த ஆடி மாதமும் சேர்ந்தால், ஆடிவெள்ளி மென்மேலும் மங்களகரமானது. மனதார அம்மனைவழிபட்டால் வாழ்வில் மங்களமாய் வாழ அனைத்து செளபாக்கியங்களையும் அள்ளித்தருவாள். 

ஆடி வெள்ளி சுக்ர வார விரதம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதம் முழுவதும், அகிலத்தைக் காக்கும் ஐயனாகிய சிவபெருமான் சக்திக்குள் ஐக்கியமாகி இருப்பார் என்பதால் அம்பிகையின் சக்தியும் பல மடங்கு அதிகரிக்கும். ஆடி மாதம் அம்மன் கோயில்கள் அனைத்திலும் பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடக்கும். 

குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடக்கும். அன்றைய தினம் அழகான அம்மன் மேலும் அலங்கரிக்கப்பட்டு அழகு தேவதையாக பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் புரிவாள். 
இயல்பாகவே வெள்ளிக்கிழமைகள் தோறும் பெண்கள் வீட்டை தூய்மைப்படுத்தி விளக்கேற்றி வழிபடுவார்கள். 

ஆடி வெள்ளியில்  அதிகாலை எழுந்து வாசலில் கோலமிட்டு, வேப்பிலைக் கொத்துகளை வாசல்படியில் தொங்கவிட வேண்டும். வீட்டின் பூஜையறையில் மகாலஷ்மியின் படத்தை வைத்து,  குத்துவிளக்கை அலங்கரித்து ஐந்துமுக விளக்கேற்ற வேண்டும். 

அம்மனை வழிபடும் போது அம்மன் பாடல்கள், மந்திரங்கள், லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும். நைவேத்யத்துக்கு சர்க்கரை பொங்கலும், பால் பாயசமும் வைத்து பிரசாதமாக விநியோகிக்க வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு தாம்புலம் கொடுக்கும் போது வெற்றிலைபாக்கு பழத்துடன் ரவிக்கை, கண்ணாடி வளையல், குங்குமம் வைத்து கொடுப்பது கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் மங்களத்தைக் கொடுக்கும். மகாலஷ்மி வீடு தேடி வருவாள்.  

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியின் வழிபாடு வற்றாத செல்வத்தை அள்ளித் தரும். குடும்பங்களின் நன்மைக்காக அம்பிகை, அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி, ஆதிபராசக்திகளை வணங்கி வழிபாடு செய்து பலனை அடையலாம். எட்டு லஷ்மிகளான அஷ்ட லஷ்மிகளின் அருளை சேர்த்து பெறுவதற்கு உகந்தநாள் ஆடி வெள்ளி என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். 

நாக தேவதைக்கும் சிறப்பு பூஜை செய்யக்கூடிய காலம் ஆடி மாத, ஆடி வெள்ளியே என்ப தால் புற்றுக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். ஆடி வெள்ளிக்கிழமையில் துர்க்கையம்மன் வழிபட்டால், தடங்கலின்றி அவள் அருளை பெறலாம். திருமணத்தடை இருக்கும் கன்னிப்பெண்கள், ராகுகாலத்தில் துர்க்கையம்மனை வேண்டி எலுமிச்சை விளக்கேற்றினால் நல்ல குணாளன் கணவனாக வாய்க்கும் பேறு பெறுவார்கள். 

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில்,108 அல்லது 1008 எண்ணிக்கையில் குத்துவிளக்கு பூஜை நடைபெறும். குத்துவிளக்கு பூஜையின் போது, நவசக்தி அர்ச்சனை விசேஷமிக்கது. நவசக்தி என்பது பராசக்தியின் சர்வ பூதக மணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரவுத்திரி, கேட்டை, வாமை என ஒன்பது அம்சங்களைக் குறிக்கும். 

ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து இருக்கும் பெண்கள், ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்தால், தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். திருமணம் கைகூடாத பெண்களும், மாங்கல்ய பலம் வேண்டியும், குடும்பத்தில் நிம்மதி பெருகவும், செல்வம் கொழிக்கவும் ஆடி வெள்ளி வழிபாடு பெண்களுக்கு முக்கியமான நாள்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால், கேட்ட அனைத்தையும் மனமுவந்து மகிழ்வோடு வழங்குவாள் அம்பிகை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP