புத்திரபாக்கியம் அளித்த சாய்பாபா
தாமோதர், என்பவர் வளையல் வியாபாரி. இவர் அகமத் நகரில் கடை ஒன்று நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தினார். எல்லா ஜோதிடர்களும் தாமோதருக்கு குழந்தை பாக்கியம் என்பது இப்பிறவியில் கிடையாது என்று கூறிவிட்டனர். ஆனாலும், தாமோதர் சாய்பாபாவின் மகிமை பற்றி பலவற்றைக் கேட்டறிந்தார். சாய்பாபாவைத் தேடி சீரடி வந்தார்.
சாய்பாபாவுக்கு அவர் ஓரு கூடை நிறைய மாம்பழங்களை வாங்கிக் காணிக்கையாகக் கொடுத்தார். சாய்பாபா அந்தக்கூடையிலிருந்து எட்டு மாம்பழங்களை மட்டும் எடுத்து தாமோதரிடம் கொடுத்தார். இதனை உன்னுடைய இளைய மனைவிக்கு கொடு. அதனால், புத்திரபாக்கியம் கிடைக்கும் என்றார் சாய்பாபா. தாமோதருக்கு நம்பிக்கை வரவில்லை. அவர் சாய்பாபாவை பார்த்து கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை கடவுளாலேயே மாற்ற முடியாது என்கிறார்கள். இப்போது கடவுள் இயற்கைக்குப் புறம்பான செயலைச் செய்வாரா? என்றார்.
உடனே சாய்பாபா "ஒரு ரோஜாச் செடியில் சிவப்பு ரோஜாவும் வெள்ளை ரோஜாவும் பூக்க முடியாதா?" என்று கேள்வி கேட்டார். பிறகு "நாளைக்காலையில் நான் உலாப் போகும் போது நீ என்னுடன் தோட்டத்துப்பக்கம் வா" என்றார் சாய்பாபா. மறு நாள் சாய்பாபாவுடன் தோட்டத்திற்குச் சென்றார் தாமோதர். தோட்டத்தில் ஒரு ரோஜாச் செடியில் ஒரு சிவப்பு ரோஜாவும் பக்கத்திலேயே ஒரு வெள்ளை ரோஜாவும் பூத்திருப்பதைப் காண்பித்தார்.
அதை கண்டதும் தாமோதருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அப்படியே சாஷ்டாங்கமாக சாய்பாபாவின் கால்களில் அவர் விழுந்தார். "இது என்னால் ஏற்படவில்லை. என் பக்தனின் சந்தேகம் தீர்க்க ஆண்டவனை வேண்டினேன் அதனால் இந்த அற்புதம் விளைந்தது" என்றார். அதன் பின் சாய்பாபா கொடுத்த 8 மாம்பழங்களில் மாயமான 4 பழம் போக மித மிருந்த 4 மாம்பழங்களை கொண்டு சென்று மனைவியிடம்கொடுத்து உண்ணச் சொன்னார். தாமோதர் மனைவிக்கு சாய்பாபாவின் அருளால் அடுத்தடுத்து எட்டுக் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் 4 மாம்பழம் மாயமானது போல 4 குழந்தைகள் இறந்து விட்டனர். தாமோதர் 4 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
newstm.in