Logo

பாபாவின் தோற்றமும், செயல்பாடுகளும்!

பாபாவின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். அவரது ஒவியத்தைக் கண்டு இன்புற்றிருக்கிறோம். ஆனாலும் அவரை நேரில் கண்டவர்களிடம் கேட்டு விசாரித்த விபரங்களை விரிவாக எழுதுவது தானே முறை?
 | 

பாபாவின் தோற்றமும், செயல்பாடுகளும்!

பாபாவின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். அவரது ஒவியத்தைக் கண்டு இன்புற்றிருக்கிறோம். ஆனாலும் அவரை நேரில் கண்டவர்களிடம் கேட்டு விசாரித்த விபரங்களை விரிவாக எழுதுவது தானே முறை?

நல்ல பொன்னிற மேனி கொண்ட பாபா, சுமார் ஐந்தரை அடி உயரம். நீலநிறம் உடைய கண்கள். அவர் தனது பற்களைத் துலக்கிப் பார்த்தவர்கள் எவருமே இல்லை. எனவே, மஞ்சள் கறைபடிந்து காணப்பட்டன. தேநீர் அருந்துவது  இல்லை. ஆனால் ஹூக்கா பிடிக்கும் பழக்கம் மட்டும  அவருக்கு இருந்தது. அந்தப் பழக்கத்தை எப்போது, எங்கே கற்றுக்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம். ஹூக்கா பிடிப்பதற்கான குழாயும் களிமண்ணால் செய்யப்பட்டது தான். அவரது பக்தர்கள் விதவிதமான குழாய்களை அன்புடன் வாங்கிக் கொடுத்தும், அவற்றையெல்லாம் குழி ஒன்றினுள் போட்டு மூடி வைத்துவிடுவார். அவர் பயன்படுத்தி வரும் இந்த மண் குழாயும் அவ்வபோது உடைந்து விடும். என்றாலும் அதனை வீணடிக்க விரும்பாமல் பழுது பார்த்துவிட்டு, மீண்டும் உபயோகிப்பார்.

கர்சீப்பை விடவும் சற்றே பெரியதான துணியொன்றை தலையைச் சுற்றி கட்டும் பழக்கம் பாபாவிற்கு இருந்தது. அந்தத் துணியை சலவை செய்ததோ, துவைத்ததோ கிடையாது.  ஆனால், அவருக்கே திடீர் திடீரென்று அதனை மாற்ற வேண்டும் என்று தோன்றும் போலும். அப்போதெல்லாம் தையற்காரரை வரவழைத்து, வேறொரு துணி தைத்துத் தருமாறு கேட்டுக்கொள்வார். தைத்துக் கொடுத்ததும் அவருக்குத் தன் சட்டைப் பையிலிருந்து நாணயங்களை அள்ளிக் கொடுப்பார். அது தையற்காரரின் நியாயமான கூலியை விடவும் அதிகமாகவே இருக்கும் என்பது தான் வியப்பின் உச்சம்.

பாபாவின் தோற்றமும், செயல்பாடுகளும்!

பெரும்பாலான வேளைகளில் கண்களை மூடி தியானத்தில் இருப்பதே அவரின் வழக்கம். பக்தர்கள் திரண்டிருப்பதைப் பற்றிக்கூட அவர் அதிகம்  அலட்டிக் கொள்வதில்லை. தன் கடமையே கண்ணாக தியானம் செய்வதிலேயே மூழ்கிவிடுவார். குழந்தைகள் மீது அதிக அளவு பாசமும், பற்றும் வைத்திருந்தார்; பாபா. அவர்களோடு ஓடியாடி விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. இரவு வேளையைத் தவிர்த்து, பகல் நேரங்களில் படுத்து உறங்கும் பழக்கம் பாபாவிற்குக் கிடையாது. கால் நீட்டி உட்கார்ந்திருந்தாலும், சுவரில் சாய்ந்தோ, நாற்காலியில் சாய்ந்தோ இருப்பதே இல்லை.

குறுந்தாடி வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். திடீரென்று மொட்டையடித்துக் கொள்ளத் தோன்றும். முடிதிருத்துபவரை வரவழைத்து அப்படியே மொட்டையடித்துக் கொள்வார். அடிக்கடி இவ்வாறு செய்து கொள்ளும் பழக்கம் பாபாவிற்கு உண்டு கஃபனி  என்றழைக்கப்படும் நீண்ட கைகளை உடைய சட்டையைத் தான் பாபா அணிந்து வந்தார். உடைகள் மீது அத்தனை ஆர்வம் இல்லாத காரணத்தால், நைந்து, கிழிந்து போன ஒரே சட்டையைப் பல நாட்கள் அணிந்திருப்பார். எப்போதாவது அதனை துவைக்கும் பழக்கம் உண்டு. அதன் ஈரம் வேகமாகக் காய்வதற்காக, நெருப்பு குண்டத்தின் மேல் தூக்கிப்பிடிப்பார்.

சில சமயங்களில் தனது கிழிந்த கஃபனியை பக்தர்கள் யாருக்காவது அளிப்பார். அதனைப் புண்ணிய பொருளாய், பெரும் பாக்யமாகக் கருதி, பக்தர்கள் மெய்சிலிர்த்து வாங்கிச் செல்லும் காட்சிகளும் உண்டு. தினமும் மூன்று முறை பொதுமக்கள் முன் தோன்றி அளவளாவுவது வழக்கம். காலை, மாலை, மதியம், மாலை ஆகிய இந்த மூன்று வேளையும் பக்தர்கள் முன் வந்து அமர்ந்து கொள்வார். அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும், அதனை மேம்படுத்துவது குறித்தும் பல்வேறு அறிவுரைகளை வழங்குவார். பள்ளிக்குச் சென்று படித்தவரில்லை என்பதால், படிக்கும் பழக்கமோ, எழுதும் பழக்கமோ அவருக்கு இருந்ததில்லை. ஆனாலும், அத்தனை விஷயங்களையும் தனது ஞான அறிவால் அறிந்து வைத்திருந்த பெரும் ஞானி அவர்.

பாபாவின் தோற்றமும், செயல்பாடுகளும்!

அப்பாஜி பட்டேல் என்பவன் பாபாவிற்கு மசாஜ் செய்து வந்தவன். அவன் கூறுவான், ‘பாபாவிற்கு மசாஜ் செய்கிறபோது அவரின் உடல்பலம் கண்டு வியந்து போயிருக்கிறேன். பீமனைப் போன்ற வலுவுடன் காணப்படும் அவரது உடல்”. நெருப்புக் குண்டத்தின் எதிரே அமர்ந்து பாபாவிற்கு மசாஜ் செய்வது இவனது வாடிக்கை. ஒருமுறை அங்கே பாபாவை சற்றே தூக்க முயற்சி செய்திருக்கிறான். தன் முழு பலத்தையும் பிரயோகித்தும் அதுமுடியாமற் போகவே, முயற்சியைத் தோல்வியுடன் கைவிட்டுவிட்டான். இதனைப் பார்த்த சாய், மெலிதாக அர்த்தம் பொதிந்த புன்னகையை அவனைப்பார்த்து சிதற விட்டுள்ளார்.

தினமும் குடிமக்களிடம் பிச்சை எடுத்தே தனது பசியை ஆற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதாவது ஐந்து வீடுகளைத் தேர்ந்தெடுத்து, அங்கு சென்று பிச்சை பெற்று வருவார். அவருக்குப் பிச்சை போடுவதை அக்கிராம மக்கள் பெரும் பேறாகவே பிற்காலத்தில் நினைத்து மகிழ்ந்தனர். குறிப்பிட்ட வீட்டின் முன் நின்று, ‘ஓ லாசி, ஒரு ரொட்டித்துண்டு கொடு” என்று உரக்கக் கூறுவார். பிச்சையிடுவதற்காக வருபவர்களை ஆசிர்வதிப்பது போல, தனது திருக்கரங்களை நீட்டி அருளுவார். அப்படியானால், அவர்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்று பொருள். அது அவர்கள் செய்த பேறு, பாக்கியமாகவே கருதி சந்தோஷித்துப் போவார்கள்.

பிச்சை எடுப்பதற்குத் தகரக்குவளை ஒன்றும், ஜோலி என்று கூறப்படும் சதுரத்துண்டு ஒன்றும் அவாஜீடம் உண்டு. குவளையில் பால், மோர், சூப் உள்ளிட்ட திரவ சமாச்சாரங்களைப் பெற்றுக்கொள்வார். ஜோலியில் திடப் பொருட்கள். அதாவது, ரொட்டி, சோறு போன்றவைகள். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கி ஒரு பானையில் வைத்து விடுவார். அதனை அங்குள்ள வேலைக்காரி  மட்டுமல்லாமல் தெரு நாய்கள், காக்கைகள் உள்ளிட்டவைகள் உண்டு செல்வது வழக்கம். யார் வேண்டுமானாலும் அந்த உணவை உண்டு செல்லலாம் என்ற உயரிய நோக்கில் தான் இப்படி பாபா நடந்துகொள்வார்.

பாபாவின் தோற்றமும், செயல்பாடுகளும்!

இதுபோன்று பிச்சை எடுத்து வாழும் ஆண்டியாகவே தன்னை முன்னிறுத்திக் கொண்டார். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று அவர் கருதியதே இல்லை. அதனால் சேமித்து வைக்கும் பழக்கத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டதுமில்லை. அவரது பக்தர்கள் பொன்னும், பொருளும், உணவுகளும் கொண்டு வந்து அவர் காலடியில் கொட்டினாலும், அவற்றில் ஒரு சிறிய தம்பிடியைக் கூடத் தனக்காக பாபா எடுத்துக் கொள்வதில்லை. அத்தனையும் பக்தர்களுக்கே பகிர்ந்தளித்தார் சாய்பாபா. இப்படி பிச்சை எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. ஒன்று, வம்சவிருத்தி, செல்வம், புகழ் போன்றவைகளைத் துறந்தவர்கள் பிச்சை எடுக்கலாம். ஆசையை துறந்த இவர்கள், தங்களுக்கென்று வீடு எதுவும் கொண்டிருப்பதில்லை. எனவே சமைத்துச் சாப்பிட முடியாது. சிறுவயது முதலே துறவு நிலை அடைந்தவர்களும் பிச்சை எடுக்கலாம். ஆனால், இல்லறத்தில் ஈடுபடும் சுகவாசிகள் இதற்குத் தகுதியானவர்கள் அல்லர்.

இரண்டாவது, ஐந்து பாவங்களைச் செய்தவர்கள் பிச்சை எடுக்கத் தகுதிபடைத்தவர்கள். அதாவது, 
(அ) கண்டணீ - பொடியாக்குதல்
(ஆ) பேஷணீ - அமைத்தல்
(இ) உதக்கும்பி - பானைகளைக் கழுவுதல்
(ஈ) மார்ஜனீ - பெருக்கிச் சுத்தப்படுத்துதல்
(உ) சுள்ளீ - அடுப்பு பற்றவைத்தல்
சமையல் செய்வதற்கு இந்த முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். இதுபோன்ற முறையினால் சமையல் செய்கிறபோது, கண்ணுக்குத் தெரியாத ஏராளமான கிருமிகள், உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இதனை அறியாமலேயே நாம் பாவம் செய்து விடுகிறோம். இப்படிப்பட்ட பாவத்தை இல்லறத்தார் தினமும் செய்துகொண்டே இருக்கின்றனர்.என்னே கொடுமை! நம் பசியாற்ற பிற உயிர்களைப் பலிகொடுப்பது என்ன நியாயம்?

பாபாவின் தோற்றமும், செயல்பாடுகளும்!

இந்தப் பாவங்களுக்கு விமோசனம் வேண்டாமா? பரிகாரம் தேவை இல்லையா? அதற்குத்தான் ஐந்து வகை தியாகங்கள் செய்ய வேண்டும் என்பர்.

அவை என்ன?
(அ) பிரம்ம யக்ஞம் -  பிரம்மத்துக்குச் சமர்ப்பித்தல்.
                                       அதாவது வேத பாராயணம் செய்வது.
(ஆ) பித்ரு யக்ஞம்   -  மூதாதையர்களுக்குச் சமர்ப்பணம் செய்தல்
(இ) தேவ யக்ஞம்     -  தேவதைகளுக்குச் சமர்ப்பித்தல்
(ஈ) பூத யக்ஞம்         - ஜந்துக்களுக்குச் சமர்ப்பணம் செய்தல்
(உ) மனுஷ்ய அதிதி யக்ஞம் - மனிதர்களுக்கும், அழைக்கப்படாத
                                                      விருந்தினர்களுக்கும் சமர்ப்பித்தல்
இதன்மூலம் ஒவ்வொரு மனிதனும் மனத்தூய்மை அடைகிறான். ஞானம் பெறுகிறான். இதனை பக்தர்களுக்கு பாபா கற்பித்தார்.

பாபாவின் தோற்றமும், செயல்பாடுகளும்!

வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP