நிஜ பக்தரான ஷாமா!
சாய்பாபாவின் மற்றொரு பக்தரின் பெயர் மாதவரால் பல்வந்த் தேஷ்பாண்டே. இவர் தான் ஷாமா என்று பின்னர் அழைக்கப்பட்டார். இவர் சாய்பாபா தங்கியிருந்த மசூதிக்கு அருகே ஒரு பள்ளி இருந்தது. அங்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் தான் ஆள் அரவமற்ற இரவுப் பொழுதுகளில் அந்த மசூதிக்குள் நிகழ்ந்த பல்வேறு அற்புதங்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தியவர் . இவர் நேரங்களில் சாய்பாபா தரிசனம் முடிந்து ,பக்தர்கள் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிய பிறகு. மசூதிக்குள் பல்வேறு பேச்சுக்குரல்கள் கேட்பதை ஷாமா அறிந்திருக்கிறார். அந்தக் குரல்கள் காரசாரமாக விவாதிப்பதையும் அவர் கேட்டிருக்கிறார். அந்தக் குரல்கள் பல்வேறு மொழிகளில் பேசிக் கொள்ளுமாம் . சாய்பாபாவிற்கு கூடத் தெரியாத ஆங்கில மொழியில் கூட அங்கு உரையாடல்கள் நடப்பதைக் கேட்டு ஷாமா ஆச்சிரயமாகி இருக்கிறார் .
இது எப்படி சாத்தியம்? யாருமே இல்லாமல் சாய்பாபா மட்டுமே தனியாக இருக்கும் அந்த மசூதியில் இத்தனைக் குரல்கள்! அதுவும் இத்தனை மொழிகளில்?!
என்ன அதிசயம் இது?
யார் இந்த சாய்பாபா?
சாதாரண ஃபக்கீர் போலக் காட்சியளிக்கும் இவருக்குள் எத்தனை விதமான சக்திகள்! ஒரு வேளை இவர் கடவுளே தானா ? கண் கண்ட கடவுளா ?
ஷாமா இப்படி பல்வேறு கேள்விகளைத் தன் மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டு குழம்பியதும் உண்டு. இந்த விஷயங்களைப் பற்றி பக்தர்களிடம் ஷாமா விவரித்திருக்கிறார். ஆனால், அவர்கள் அதனை நம்பத் தயாராக இல்லை. அது எப்படி முடியும்? தெரியாத மொழியில் சாய்பாபாவால் எப்படி உரையாட முடியும்? ஆனாலும் அது உண்மை. பக்தர்களிடம் சத்தியம் செய்து சாதித்திருக்கிறார் ஷாமா. இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு ஷாமா மசூதியில் சாய்பாபாவிற்கு வேண்டிய சிறிய சிறிய காரியங்களை வலியவே வந்து செய்திருக்கிறார். சாய்பாபா விரும்பிப் புகைக்கும் ஹூக்கா குழாயைத் தயார் செய்து கொடுப்பது ஷாமாவின் பணியாகவே ஆகிப்போனது .
சாய்பாபாவின் மீதான பக்தி அதிகரித்து, அதிகரித்து எல்லாமே அவர்தான் என்று உறுதியாக எண்ண ஆரம்பித்துவிட்டார் ஷாமா. அப்புறம் எதற்கு இந்த ஆசிரியர் பணி ? விட்டெறிந்தார். தனக்கு சாப்பாடு போட்ட அந்தப் பணி கூட சாய்பாபாவின் முன்னால் அவருக்கு துச்சமாகப் போனது. சாய்பாபாவிற்கு முழுநேர சேவை செய்வதே தன் கடமை என்று பணியாற்றிய வந்தார் ஷாமா என்ற உண்மையான மற்றொரு சாய்பாபா பக்தர். இப்படிப்பட்ட நிஜ பக்தரான ஷாமாவை ஒரு நச்சுப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது. விஷம் அப்படியே அவரது ரத்தத்திற்குள் ஏறவும் தொடங்கியது . அந்த ஊர் மக்கள் உடனே அங்கு திரண்டனர் தங்கள் வழக்கப்படி பாம்பு கடித்தவரை அங்குள்ள விரோபா கடவுள் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குத் தூக்கிச் செல்ல முயன்றனர். ஆனால் ஷாமா, அதற்கு மறுத்து தான் மலையென நம்பும் தன் கடவுள் சாய்பாபாவிடம் தன்னை எடுத்துச் செல்லுமாறு கூறினார்.
"பாம்பு கடித்திருக்கிறது.விஷம் வேகமாக ஏறிக்கொண்டிருக்கிறது. விரோபா கடவுளிடம் கொண்டு போனால் உடனடியாக விஷம் இறங்கி உயிர் பிழைக்க கடியை எப்படிப் போக்க முடியும்?" என்று ஊரார் சந்தேகத்துடன் கேட்டனர். ஆனால், சாய்பாபாவிடம், தான் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் திடமாக இருந்தார் ஷாமா. அப்படியே மசூதிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார் மசூதிக்குள் நுழைய முயன்ற, சாய்பாபா பெரும் குரலெடுத்து கர்ஜனை செய்தார் .
"மேலே ஏறாதே மீறி ஏறினால் அவ்வளவு தான். பேசாமல் கீழே இறங்கிப் போய்விடு!" எல்லாமே சாய்பாபா தான் என்ற நம்பிக்கையுடன் மசூதிக்கு வந்த ஷாமாவிற்கு, சாய்பாபாவின் இந்த ஆக்ரோஷம் ஏமாற்றத்தை அளித்தது. “நம்பி வந்த தன்னை இப்படித் திரும்பிப் போகச் சொல்கிறாரே ! என்ற சங்கடம் வாசலிலேயே ஷாமா வைக்கப்பட்டார்”. சற்று நேரத்தில் சாதாரண நிலைக்கு வந்த சாய்பாபா ஷாமாவை உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.
"பயப்படாமல் வீட்டிற்குச் செல். எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று ஷாமாவிற்கு தைரியம் கூறி அனுப்பி வைத்தார். பின்னர், தனது வேறு இருபக்தர்களான தாத்யா பாட்டீல், காகா சாஹேப் ஆகிய இருவரையும் அழைத்து ஷாமாவை பத்திரமாகக் கவனித்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார். "ஷாமா விரும்பியதை சாப்பிடச் சொல்லுங்கள். ஆனால், இரவு மட்டும் உறங்க விட்டுவிடாதீர்கள். அவர் கண் விழித்தே இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்" என்று அந்த பக்தர்களிடம் கூறினார். இதனை ஏற்ற அவர்களும் அப்படியே கவனித்துக் கொண்டனர் . ஷாமாவும் தனது மரணத்தை சாய்பாபாவின் அருளால் வென்றார். அப்புறம் தான் அவருக்கு புரிந்தது, மசூதிக்குள் நுழைகிறபோது மேலே ஏறாதே ,கீழே இறங்கு என்று சாய்பாபா கூறியது தன்னை அல்ல. தன் மீது புகுந்துள்ள விஷத்தை என்பது. ஒரு சமயம் சோலாப்பூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் சாய்பாபாவைத் தரிசனம் செய்ய வந்திருந்தார்.
அவருக்குத் திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் குழந்தைப் பாக்கியம் இல்லை என்பது தான் அவரது குறை சாய்பாபாவின் அருள் கிடைத்தால் அந்தப் பாக்கியம் கிடைக்கும் என்பது அந்தப் பெண்மணியின் நம்பிக்கை. ஷாமாவிடம் தன் குறையைக் கூறி சாய்பாபா அருள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டுக் கொண்டார். ஷாமாவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். சாய்பாபா உணவு உண்டுவிட்டுத் தன் கையைக் கழுவிவிட்டு, அப்படியே வந்து ஷாமாவின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினார். ஷாமாவை வெட்கம் ஆட்கொண்டது "என்ன சாய்பாபா இது !உங்களுக்கு ஆத்மார்த்தமாகப் பணிவிடை செய்யும் என்னைக் கிள்ளுகிறீர்களே!" என்று சிணுங்கினார் . "கடந்த 72 பிறிவிகளாய் நீ என்னுடனேயே இருக்கின்றாய். உன்னைக் கிள்ளுவது தவறா என்ன?' என்று சாய்பாபா திரும்பிக் கேட்டார். சாய்பாபாவின் செல்லக் கிள்ளல் கிடைப்பதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்! ஷாமா சாய்பாபாவின் கூற்றை ஏற்றுக்கொண்டார்.
அப்போது அங்கே ஓரமாக நின்றிருந்த அந்தப் பெண்மணியை அருகே வருமாறு சைகை காண்பித்தார் ஷாமா. அந்தப் பெண்மணியும் அப்படியே செய்து வந்து கையில் இருந்த தேங்காயை சாய்பாபாவிடம் வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட சாய்பாபா, தேங்காயைக் குலுக்கினார். உள்ளுக்குள் ஏதோ உருளுவது போல சப்தம் கேட்டது . " என்ன ஷாமா இது!ஏதோ சப்தம் கேட்கிறது என்றார் சாய்பாபா. "அந்தப் பெண்மணியின் வயிற்றில் இதுபோல குழந்தை ஒன்று உருளும் பாக்கியம் நிகழப்போகிறது என்று அர்த்தமாக இருக்கும்"! என்று சூசகமாக அவளுக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதைத் தெரிவித்தார் ஷாமா. சாய்பாபா சற்று நேரம் ஏதோ யோசனையில் ஆழ்ந்தார். பின்னர் தேங்காயை உடைக்குமாறு ஷாமாவிடம் பணித்தார். ஆனால் அப்படிச் செய்யத் தயங்கிய ஷாமா, அப்படியே முழுத் தேங்காயாக அந்தப் பெண்மணியிடம் வழங்குமாறு சாய்பாபாவிடம் வேண்டினார். ஆனால், சாய்பாபா அப்படிச் செய்யவில்லை. சற்று நேரம் பொறுமையாக இருந்தார். பின்னர் தன் வாய் திறந்தார் .
" அந்தப் பெண்ணுக்கு இன்னும் 12 மாதங்களில் அழகான குழந்தை பிறக்கும் "என்று வாக்கு அருளினார். அதன் பிறகு, சாய்பாபா கட்டளையிட்ட மாதிரி அந்தத் தேங்காயை இரண்டாக உடைத்தார் ஷாமா. அதில் ஒரு பாதியை சாயபாபாவும், ஷாமாவும் சாப்பிட்டார்கள். அடுத்த பாதி அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்பட்டது . அந்தப் பெண்ணைப் பார்த்து ஷாமா, "நீ பயப்படாமல் போ. உனக்கு கண்டிப்பாகக் குழந்தை வரம் கிட்டும். அடுத்த 12 மாதங்களில். அப்படிக் கிடைக்காவிட்டால் சாய்பாபாவை இந்த மசூதியை விட்டு விரட்டி அடிப்பேன். என்னை மாதவ் என்று பெயர் சொல்ல அழைத்துக் கொள்ளவும் மாட்டேன் என்று உறுதியாகக் கூறினார். இதனைப் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சாய்பாபா. ஆனால், சாய்பாபாவின் வாக்கும் பொய்க்கவில்லை ஷாமாவின் நம்பிக்கையும் வீண்போகவில்லை. அந்தப் பெண்மணி அடுத்த பத்தாவது மாதத்தில் ஒரு அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள். அப்படியே சாய்பாபாவிடம் வந்து ஆசியும் பெற்றுச் சென்றாள்.
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
newstm.in
newstm.in