நம்பியோரை கைவிடாத சாய்பாபா
சாய்பாபாவின் அதிதீவிர பக்தர் “ராவ்ஜி பகால்கர்”. இவரும் ஏனையோரைப் போலவே சாய்பாபாவின் பக்தர். அவரது இளைய மகனுக்கு திடீரென்று விஷக்காய்ச்சல் ஏற்பட்டது . மருத்துவர்கள் கைவிட்டுவிட்டனர் . இனி என்ன செய்வது?
சாய்பாபா மட்டுமே ஒரே நம்பிக்கை. கண்களை மூடியவாறு சாய்பாபாவை மனதார வேண்டினார். பிரார்த்தனை செய்தார். அன்று நள்ளிரவு நேரம் . அவர்கள் தங்கியிருந்த “டூலியா” என்ற இடத்திற்கே சாய்பாபா நேரடியாக வந்தார் . அவர் கையில் உதி. அதனை அப்படியே நோய் வாய்ப்பட்டுக் கிடக்கும் ராவ்ஜியின் இளையமகன் நெற்றியில் பூசினார். "கவலைப்படாதே பக்தா . உன் மகனுக்கு ஒன்றும் ஆகாது . பிழைத்துவிடுவான்.
நாளைக் காலையில் அவனைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் காய்ச்சல் சுத்தமாக மறைந்துவிடும். அவன் நன்றாகக்குணமானதும் ஷீரடிக்கு அழைத்து வா “ என்றவாறு சொல்லிவிட்டு மறைந்து விட்டார் சாய்பாபா. இது நிஜமா அல்லது கனவா என்று ராவ்ஜிக்கு சந்தேகம் தோன்றியது. அவரால் அதற்கு விடை காணவே முடியவில்லை. விடிந்தது . பதற்றத்துடன் மகனின் நெற்றியில் கவலை மற்றும் ஆவலுடன் கைவைத்துப் பார்த்தார் . காய்ச்சல் இல்லை . அவன் உடம்பு சாதாரணமாக இருந்தது. சந்தோஷத்தில் திளைத்தார். மருத்துவரும் வந்து பார்த்தார். அவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று ? இது நடந்த பிறகு, ராவ்ஜிக்கு ஷீரடியில் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அது அவரது சிநேகிதரும், சாய்பாபாவின் நெருங்கிய பக்தருமான ஷாமா எழுதியிருந்தார்.. அதில் சாய்பாபா டூலியாவில் இருக்கும் எனது நண்பரின் வீட்டிற்குப் போயிருந்ததாகவும், அவரது மகனைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், கூறியதாக எழுதப்பட்டிருந்தது.
அப்படியானால் அன்று இரவு சாய்பாபா வந்தது நிஜமே தான்! இதுவே ராவ்ஜிக்கு உடம்பில் புல்லரிப்பை உண்டுபண்ணியது . இரண்டு வாரம் கடந்தது. ராவ்ஜியின் இளைய மகனின் உடல் நிலை தற்போது நன்றாகத் தேறிவிட்டிருந்தது . எனவே மகனை அழைத்துக் கொண்டு அவர் ஷீரடிக்குச் சென்றார்.
அப்போது, “கோபர்கான்” என்ற இடத்தில் வண்டிக்காரன் அவருடன் ஏதோ தகராறு செய்து கொண்டிருந்தான் . இதனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் ஷீரடியை அடைய முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போதும் ஷீரடியில் ஒரு அற்புதம் நடந்தது.
சாய்பாபா ஷாமாவிடம் "உன் சிநேகிதன் ஷீரடிக்கு வந்து கொண்டிருக்கிறான் . ஆனால், வண்டிக்காரன் அவனிடம் வீண் தகராறு செய்து கொண்டிருப்பதால் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறான் " என்று கூறினார் .
ஆக , தனது உண்ணமையான பக்தன் ராவ்ஜியை அந்த அளவிற்கு சாய்பாபாவின் பின் தொடர்ந்து கண்காணித்து வருவது எத்தகைய அற்புதமான விஷயம்.
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
newstm.in
newstm.in