உண்மையாக அளிக்கும் தட்சணைக்கு என்றுமே மதிப்பு உண்டு.
சாய்பாபா எப்போதுமே பக்தர்களிடம் வேறுபாடு எதனையும் காட்டுபவர் அல்ல. ஆனால், கடவுளின் உத்தரவை நிறைவேற்றுவார் . தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்ததை செயல்படுத்துவார் . அது பக்தர்களிடம் சாய்பாபா வேறுபாடு காண்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். ஒரு முறை கோவாவில் இருந்து வந்திருந்த இரண்டு பக்தர்கள் சாய்பாபாவைத் தரிசனம் செய்து முடித்தனர் . அதில் ஒருவரிடம் , 15 ரூபாய் தட்சிணை தருமாறு கேட்டுப் பெற்றார் சாய்பாபா. மற்றவர் 35 ரூபாயை அன்புடனும், பக்திப் பரவசத்துடனும் சாய்பாபாவிடம் வழங்கியபோது, அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் .
அவர் முகம் சுருங்கி விட்டது. சாய்பாபா தனது பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்தது பெரும் கவலையை அள்ளிக் கொடுத்தது . இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாமாவின் மனதையும், இந்தச் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியது. சாய்பாபாவிடமே இதற்கான விளக்கத்தைக் கேட்டார் ஷாமா.
அதற்கு சாய்பாபா, "அவர் மசூதிக்கு கடன்பட்டிருக்கிறார் . அதனால் தான், மயி அவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டார் . மற்றவர் அப்படி எதுவும் கடன்படவில்லையே. அப்புறம் அவரிடம் எதற்காகப் பணத்தை வாங்க வேண்டும். எனக்கு எதற்கு காசு ,பணம்? அதைவைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று திருப்பிக் கேட்டார். இதன் அர்த்தம் ஷாமாவிற்கு புரியவில்லை . இதைப்பற்றி சற்று விளக்கமாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
சாய்பாபா எப்போதுமே தனது விளக்கத்தை நேரடியாகக் கூறுவது கிடையாது. அவர் கூறுகின்ற கதை வடிவம் சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமே உறுத்தும். அப்படியே தான் இந்தச் சம்பவங்களையும் சாய்பாபா கூறத்தொடங்கினார் கதையாக. "ஒருவர் வேலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் . நல்ல வேலை கிடைக்காமல் கிடைத்தால் உடனடியாக ஷீரடிக்கு வந்து தனது முதல் மாதச் சம்பளத்தைக் காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக் கொண்டார். அப்படியே அவருக்கு நல்ல வேலையும் கிடைத்தது . ஆனால் அது கிடைத்த ஜோரில் காணிக்கை செலுத்தும் வேண்டுதலை அவர் மறந்தார் . தற்போது மாதம் 700 ரூபாய் சம்பளம் வாங்குகிறார் .
அவரது கர்மவினை இப்போது அவரை இங்கே தள்ளிவிட்டது. ஆகவே அவரின் காணிக்கையை நான் பெற்றுக் கொண்டேன் " என்றார். உடனே, அந்த இரு பக்தர்களில் ஒருவர் சாய்பாபாவின் முன் கண்ணீர் சிந்தினார். இந்தக் கதைக்குச் சொந்தக்காரன் தான் என்றும் ,தன்னைப் பற்றியே சாய்பாபா இவ்வாறு கூறினார் என்றும் உருக்கத்துடன் கூறினார் . தனது வாக்குமீறலுக்கு இது சரியான தண்டனை தான் என்றும் அவர் பிதற்றினார். கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் தங்களின் திறந்த வாயை மூடவும் மறந்தனர் . இந்தச் சம்பவம் சரியே . அப்படியானால் மனமுவந்து அளித்த மற்றொரு பக்தரின் தட்சிணையை சாய்பாபா ஏன் வாங்க மறுத்தார் .
அதற்கு சாய்பாபா விளக்கமளித்தார். "என்னிடம் பல வருடங்களாக உண்மையான வேலைக்காரனாக இருந்த சமையற்காரன் ஒருவன் ,ஒருநாள் நான் சேமித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் திருடிக் கொண்டு ஒடி விட்டான் . இதனால் அதிர்ந்து போன நான் பைத்தியம் பிடித்தவன்போல தெருத் தெருவாக அலைந்து எங்கெங்கோ சுற்றித் திரிந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் வந்து, எனது துயரத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்தார் . பின்னர் அவர் சொன்னார் . மும்பை அருகே “கோபர்கான்” என்னுமிடம் உள்ளது. அதனையடுத்து “ ஷீரடி” என்ற இடத்தில் ஒரு ஃபக்கீர் இருக்கிறார்.
அவரை வேண்டிக் கொண்டு பிரத்தனை செய் உன் கஷ்டங்கள் தீரும் என்று கூறினார். நானும் அவர் சொன்ன படியே செய்தேன் . அந்தப் பிரார்த்தனையின் பலன் நல்ல படியாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக , எனக்கு மிகவும் பிடித்தாமான அரிசி உணவு சாப்பிடுவதையே தியாகம் செய்தேன்.
எனது பிரார்த்தனைக்கு நல்ல பலனும் கிடைத்தது. அந்தச் சமையற்காரன் மனம் திருந்தி என்னிடம் வந்தான். திருடிய பணத்தை என்னிடமே திருப்பியும் கொடுத்தான் .இதனால் சந்தோஷமடைந்த நான், ஷீரடிக்குச் செல்வதற்காக கப்பலில் ஏற முனைத்தேன் . ஆனால் கூட்டம் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி கப்பல் ஊழியர்கள் என்னை அனுமதிக்கவில்லை. ஆனாலும், அதில் ஒரு பணியாள் என்னிடம் இரக்கம் காண்பித்தான். கப்பலில் ஏற அனுமதித்தான் ஷீரடி வந்தடைந்தேன் " என்றார் சாய்பாபா.
இது சாய்பாபாவின் கதையல்ல . அவர் கூறிய 'நீ' என்பது இரண்டாவது பக்தரைக் குறிப்பிட்டது என்பது அனைவருக்குமே புரிந்தது. கஷ்டப்பட்டு ,சாய்பாபாவை தரிசிக்க “கோவாவில்” இருந்து ஷீரடிக்கு வந்த அந்த பக்தரிடம் , தட்சிணை வாங்க சாய்பாபா மறுத்ததற்காண காரணம் இப்போது ஷாமா உட்பட அங்கிருந்த அத்தனை பக்தர்களுக்கும் தெள்ளத் தெளிவாகவே புரிந்துவிட்டது.
வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
newstm.in
newstm.in