திருச்சி: உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் கும்பாபிஷேகம் !
108திவ்யதேசங்களில் இரண்டாவதாக விளங்கும் உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108திவ்யதேசங்களில் இரண்டாவதாக விளங்குவதும், திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோயிலுமான உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார், ஸ்ரீரங்கநாதரின் மற்றொரு பத்தினியாக விளங்குவதால் இக்கோவிலில் பெருமாளுக்கென தனி உற்சவமூர்த்தி இல்லை.
மாறாக ஆண்டுக்கு ஒருமுறை திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் பங்குனி நட்சத்திரத்தன்று இக்கோவிலில் எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேர்ந்து பக்தர்களுக்கு சேவைசாதிப்பார்.
திருப்பாணாழ்வார் அவதரித்த ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதுமானதும் இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி 7ம்தேதி நடைபெற்று ஆகமவிதிகளின்படி 12 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் இனிதே நிறைவுற்று.
மகா சம்ப்ரோக்ஷண பூர்வாங்க பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் கடந்த 28ஆம் தேதி இரவு தொடங்கியது. 29ஆம் தேதி திருக்காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு தொடர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தது.
இன்றையதினம் காலை 8.30 மணியளவில் யாகசாலை பூஜைகள் பூர்ணாஹூதியுடன் நிறைவுபெற்றது. தொடர்ந்து கடங்கள் யாவும் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக பட்டாச்சாரியார்களால் எடுத்துவரப்பட்டு 8.55 மணியளவில் விஷ்வக்ஸேநர், கருடன், விமானங்கள், ஆழ்வார் மற்றும் ஆச்சாரியார்களுக்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்று அதன்பின்னர் அமைச்சர்கள் கொடியசைக்க ராஜகோபுரம், கமலவல்லி நாச்சியார் மூலவர் விமானத்திற்கு சமகாலத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
இதில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
newstm.in
newstm.in