'எம்.ஜி.ஆர் மகன்' கதை திருட்டா?: சிக்கலில் சசிகுமார் படம்
சசிகுமார் நடித்து வரும் 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று பத்திரிகையாளர் ஒருவர் புகாரளித்துள்ள சம்பவம், தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பொன்.ராம். இவர், தற்போது சசிகுமார் நடிப்பில் 'எம்.ஜி.ஆர் மகன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக மிருணாளினி ரவி நடித்து வருகிறார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் தேனி கண்ணன் என்பவர் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில், கடந்த 2017ஆம் ஆண்டு வார இதழ் ஒன்றில் 'இதயக்கனி' என்ற தலைப்பில் தான் ஒரு சிறுகதை எழுதியதாகவும், இதை படமாக்க எண்ணி தன்னுடைய நண்பர் ஒருவரிடம் கூறியதாகவும், அவர் தற்போது 'எம்.ஜி.ஆர். மகன்' திரைப்படத்தின் இயக்குனரின் உதவியாளராக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய கதையில் பேரன் என குறிப்பிட்டதை, மகன் என மாற்றி, இப்படத்தை எடுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ’எம்.ஜி.ஆர். தன் குடும்பத்தில் இருந்து, தனிப்பட்ட எவரையும் முன்னிறுத்தியதில்லை. ஆகவே, ‘எம்.ஜி.ஆர். மகன்’ என்ற தலைப்பை மாற்ற வேண்டும்’ என அதிமுக பிரமுகர் ஆவடி குமார் கூறி இருந்தார்.
மேலும், படக்குழு தேனி அருகே அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தி காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in