நடிகையை பார்த்த குஷியில் நடுரோட்டில் தாயை விட்டு சென்ற மகன்!
கேரளாவில் நடந்த படப்பிடிப்பில் நடிகையை பார்த்து பூரித்துபோன வாலிபர், தனது தாயாரை மறந்து பல மணி நேரம் சாலையிலேயே தவிக்க விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் மலையின் கீழ் அருகே உள்ள விளவூர்க்கல் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞர் ஒருவர் அவரது 66 வயதான தாயாருக்கு ஓய்வூதியம் வாங்குவதற்காக மலையின் கீழ் அலுவ தாயாருடன் சென்றுள்ளார். தாயாரை அலுவலகத்தில் அமர வைத்த இளைஞன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அருகில் உள்ள கோயிலில் நடிகை மஞ்சுவாரியரின் படப்பிடிப்பு நடப்பதாக கூறியுள்ளனர்.
மஞ்சுவாரியரின் தீவிர ரசிகரான இளைஞன் உடனே படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார். நடிகையை பார்த்த மகிழ்ச்சியில், தாயை மறந்து அங்கேயே படப்பிடிப்பை பார்த்து கொண்டிருந்துள்ளார். ஓய்வூதியத்தை வாங்கிய அவரது தாயார், மகனை தேடியுள்ளார். மகன் வருவான் என காத்திருந்த தாயார் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. வெகுநேரம் தவித்த தாய் வீட்டுக்கு செல்ல தீர்மானித்து ஆட்டோ ஒன்றை பிடித்தார்.
ஆனால், அவருக்கு வீட்டுக்கு செல்வதற்கான சரியான வழி தெரியவில்லை. இதனால் அங்கும், இங்குமாக ஆட்டோ ஓட்டுநர் அலைந்து கொண்டிருந்தார். பல மணி நேரம் ஆகியும் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஆட்டோ ஓட்டுநர், அவரை ஓரிடத்தில் இறக்கிவிட்டு விட்டு நைசாக நழுவி விட்டார். என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து, திக்குமுக்காடிய அவர் சாலையில் நின்று அழத் தொடங்கினார். அதைப்பார்த்த அந்த பகுதியினர் அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறினார். அவர்கள், மலையின்கீழ் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வயதான தாயாரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவரிடம் இருந்த ஆவணங்களை பரிசோதித்தபோது அவரது மகன் செல்போன் எண் கிடைத்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போதுதான் நடிகையை பார்த்த மகிழ்ச்சியில் தாயை மறந்த சம்பவம் அந்த இளைஞருக்கு நினைவுக்கு வந்தது. இதையடுத்து காவல் நிலையத்துக்கு விரைந்து சென்ற அவரை போலீசார் கண்டித்து, தாயை அவரிடம் ஒப்படைத்தனர்.
Newstm.in
newstm.in